27 November 2017

The Blue Umbrella ..ரஸ்கின் பாண்ட்




வாழ்க வளமுடன்,


       சில மாதங்களுக்கு முன் பையனுக்கு பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. அதாவது ஆங்கில இலக்கியத்தில் ஏதேனும் இரு எழுத்தாளர்களை  பற்றி scrab book   செய்யணும்னு .

அதில் பையன் ஒருவர் பழையவர்,  ஒரு புதியவர் என்ற கணக்கில்

சரோஜினி நாயுடு அவர்களையும்

 ரஸ்கின் பாண்ட் அவர்களையும்  தேர்வு செய்து

அவர்களின் படங்களை பார்த்தும்...

 அவர்களின் படைப்புகளை வாசித்தும் குறிப்புகள் எடுத்தான்.


scrab book ற்கு எதுவும் பிரிண்ட் அவுட் எடுக்காமலே,

அனைத்தும் நாங்களே வரைந்தும் எழுத்தியும் செய்தோம்.

வரைந்தது எனது வேலை,   எழுதியது பையனின் வேலை😛







..............

அப்பொழுது தான்  ரஸ்கின் பாண்ட் அவர்களை

குழந்தைகளுக்கான எழுத்தாளர் என

அறிந்துக் கொண்டேன்.

அவரின் படைப்புகளை வாசிக்க வேண்டும் எனவும் நினைத்தேன்,

ஆனால் வாசிக்க இயலவில்லை.

.................


போன வாரம் முக நூலில் ரஸ்கின் பாண்ட் அவர்களின் The Blue Umbrella

என்ற கதையின் மொழி பெயர்ப்பு வாசிக்க கிடைத்தது.

உண்மையில் மிக அருமை.

நானும் வாசித்து , பசங்களிடமும் பகிர்ந்தேன்.



..........

முக நூலில்  Vijay Bhaskarvijay  அவர்கள்
மொழி பெயர்த்ததை    அப்படியே இங்கு பகிர்கிறேன்.



The Blue Umbrella ங்கிற ரஸ்கின் பாண்ட் எழுதின கதையை இன்னைக்கு சொல்றேன்.


ஒரு மலை கிராமத்துல பினியா பினியான்னு ஒரு சின்னப் பொண்ணு இருந்தா.


அவ ரொம்ப சுட்டி. எப்பவும் கிராமத்துல இங்கேயும் அங்கேயும் அலைஞ்சிட்டு எல்லார் கூடவும் பேசிட்டு அன்பா இருப்பா.


அந்த ஊர்ல உள்ளவங்க எல்லாருக்கும் பினியா மேல ரொம்ப அக்கறை உண்டு.

ஒருநாள் பினிய அப்படி சுத்திட்டு இருக்கும் போது அங்க ஒரு குடும்பம் பிக்னிக் வந்திருக்கிறத பாக்குறா.

அவுங்க ஒரு அழகான நீலக்குடை வெச்சிருக்காங்க.

அத விரிச்சி தரையில வெச்சிருக்கும் போது ஒரு பெரிய நீலப்பூவ வெச்சிருக்கிறா மாதிரி ரொம்ப அழகா இருக்கு.

 பினியா அந்த நீலக்குடையை வெச்ச கண் வாங்காம பாத்துட்டு இருக்கா.


பினியா நீலக்குடையை பாக்கும்போது பினியா கழுத்துல போட்டிருக்கிற புலிநக டாலர் செயின அந்த குடும்பத்தோட தலைவி பாத்துகிட்டு இருக்காங்க.

“ஏய் அழகான பொண்ணே எனக்கு உன் செயின் கொடுக்குறியா. அது அழகா இருக்கு. நான் ரெண்டு ரூபா தரேன்”

“இல்ல தரமுடியாது” இது பினியா.

“நான் உனக்கு பத்து ரூபா தரேன்”

“இல்ல தரமுடியாது” இது பினியா.

அப்பதான் அந்த பெண் பினியா நீலக்குடைய பாக்குறத கவனிக்கிறாங்க.

”உனக்கு அந்த நீலக்குடை பிடிச்சிருக்கா. அதத்தந்தா நீ எனக்கு அந்த புலி நக செயின் தருவியா”

“சரி”

எந்த நீலக்குடை பாத்து பினியா ரொம்ப ஆசைப்பட்டாளோ இப்ப அது அவளுக்கே சொந்தமாச்சு.

பினியாவுக்கு குடை மேல ஒரே பெருமை

பினியாவுக்கு குடை மேல ரொம்ப அன்பு

பினியாவுக்கு குடை மேல ரொம்ப அக்கறை

பினியா எப்பவும் குடையை விரிச்சி தலைக்கு மேல தூக்கிப் பிடிச்சிகிட்டு பெருமையா இங்கப் போறா அங்கப் போறா.

மழை பெய்யலன்னாலும், வெயில் அடிக்கலனாலும் பினியா அந்த குடைய பிடிச்சிட்டு போறா.

“ஏன் பினியா அந்தக் குடையை எப்பவும் விரிச்சி வெச்சுகிட்டே இருக்கனுமா சுருக்கி வைக்கக் கூடாதான்னு” கிராமத்துக்காரங்க கேட்டா சிரிச்சிட்டு போகுறாளே தவிர நீலக்குடையை சுருக்குற வழியக் காணும்.


ஊரே அந்த நீலக்குடை பத்தி பேசிச்சி.

அதோட அழகப் பத்தி பேசிச்சி.

ஒருநாள் மழை பெய்யும் போது பினியா அந்த நீலக்குடை மேல மழைத்துளி விழுற ஒசை கேட்டு சிலிர்க்கிறா.


அப்போ அவ கால் பக்கத்துல ஒரு நாகப்பாம்பு இருக்கு.

பினியாவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல.

அது சீறி பினியாவ கொத்த வரும் போது விரிச்சி வெச்ச நீலக்குடையை வெச்சி நாகப்பாம்ப தடுக்குறா.

அது அடிவாங்கி ஒடிப்போயிருது.

என் உயிரக் காப்பாத்தின குடை அப்படின்னு அந்த நீலக்குடை மேல இன்னும் அக்கறை வருது.

 சிலர் பினியாவோட நீலக்குடையை ரசிக்கிறாங்க.


சிலர் பொறாமைபடுறாங்க.

அதுல ரொம்ப பொறாமைபடுறவரு அங்க டீக்கடை வெச்சிருக்கிற ராஜாராம்.

ராஜாராம் என்ன பண்றாரு ஒரு பையனுக்கு அஞ்சு ரூபா கொடுத்து பினியாவோட நீலக்குடையை திருடிட்டு வரச்சொல்றாரு.


அவன் அப்படி நீலக்குடையை ரகசியமா திருட வரும் போது பினியாகிட்ட மாட்டிக்கிறான்.

 ஊர்க்காரங்க கிட்ட மாட்டிகிட்டு ராஜாராம்தான் திருடச் சொன்னருங்கிற உண்மையை சொல்லிர்ரான்.

இப்போ ஊர் ராஜாராம வெறுக்குது.

அன்னைல இருந்து ஊர்ல ஒருத்தரும் ராஜாராம் டீக்கடைல டீயே குடிக்கல.

ராஜாராம் தலைல கைவெச்சிட்டு இருக்காரு.

 அவரோட வியாபாரமே அவரோட திருட்டு புத்தியால போகுது.

 இப்படி ஊரே ராஜாராம் கடையை தவிர்க்கும் போது இரண்டாவது நாள் பினியா வர்றா.

“மாமா எனக்கு அந்த மிட்டாய் கொடுங்க” கேக்குறா.

ராஜாராம் காச வாங்கிட்டு மிட்டாய் கொடுக்கும் போது குழம்பிப் போயிர்றாரு.

“என்னடா இது நாமதான் இந்தப் பொண்ணோட நீலக்குடையை திருடினோம்னு இதுக்கு தெரியும்.

இருந்தாலும் வெறுப்பில்லாம மிட்டாய் வாங்குறாளே” இப்படி யோசிக்கும் போது பினியா நீலக்குடையை அவர் கடைல விட்டுட்டு போறத பாக்குறாரு.

அவருக்கு லேசா ஆசை வருது.

நீலக்குடையை பினியா வெச்சத யாரும் பாக்கல தூக்கி வீட்ல வெச்சிருவோமா” நினைக்கிறார்.

அப்புறம் “ச்சே இப்பதான் பெரிய தப்பு செய்திருக்கிறோம்.

அத இந்த நல்ல மனசுள்ள பொண்ணு மன்னிச்சி நம்ம கூட பழகுறா.

நமக்கு இப்படி தோணுதேன்னு” நினைச்சிட்டு ஒடிப்போய் பினியாகிட்ட

“பினியாம்மா உன் நீலக்குடையை மறந்து வெச்சிட்டு போற பாரு”

“இல்ல ராஜாராம் மாமா அந்த குடை மறந்து வைக்கல.

அது உங்க கிட்டயே இருக்கட்டும்”

“எனக்கு ஏன் குடைமா”

“இல்ல உங்க கிட்டையே இருக்கட்டும்.

 எனக்கு அந்த நீலக்குடை இப்ப பெரிசா தெரியல மாமா”

“உண்மையாவா சொல்ற”

“ஆமா மாமா”

ராஜாராமுக்கு ஒரு மாதிரி ஆகிருது.

அந்த குடை அந்த கிராமத்துல தேவையில்லாத பொறாமைய வளக்குதுன்னு பினியா நினைச்சி அத எனக்கே கொடுத்திருக்கிறா.
எவ்வளவு பக்குவம் அவளுக்கு.

அவ என்ன திருத்திட்டா.

 என் மனச விசாலமாக்கிட்டா.

இப்படியெல்லாம் நினைச்சி என்ன பண்றாரு.

அந்த நீலக்குடையை விரிச்சி எப்பவும் கடைக்கு வெளியவே வெச்சிர்ராரு.

அந்த கிராமத்து மக்கள் எல்லாரும் ராஜாராம்கிட்ட கேட்டுட்டு அந்த நீலக்குடையை எடுத்துட்டு உபயோகிச்சிட்டு கொடுத்துர்ராங்க.

ஊரே இப்ப நீலக்குடையால சந்தோசமா இருக்கு.

ஊர் மகிழ்ச்சியா இருக்கிறதப் பாத்து பினியாவுக்கு சந்தோஷம்.

அப்போ ராஜாராம் வீட்டு கூரைல படர்ந்திருக்கிற செடிகளோட பழங்கள சாப்பிட இரவு நேரத்துல ஒரு கரடி வருது.

அது அதோட நகம் ஒண்ண விட்டுட்டு போயிருது.

ராஜாராம் அந்த கரடி நகத்த எடுத்து ஒரு நகை செய்ரவர்கிட்ட எடுத்துட்டு போய் அத ஒரு செயின் டாலராக்கி ஒரு செயின் செய்து வாங்குறாரு.

அந்த கரடி நக செயின பினியாகிட்ட கொடுத்து

“இது மாமாவோட அன்பு பரிசு வாங்கிக்கம்மான்னு” சொல்றாரு.

பினியா அத வாங்கி அவ கழுத்துல ஆசையா போட்டுக்குறா.

அந்த கரடி நக டாலர் செயின் அவளுக்கு அழகா இருக்கு.

நீலக்குடை கடைக்கு வெளிய சூரிய ஒளிய பிரதிபலிச்சிகிட்டு இன்னும் அழகா இருக்கு.

அவ்ளோதான் கதை.

.... Vijay Bhaskarvijay




ரொம்ப எளிய , அழகிய கதை,  குழந்தைகளுக்காக !







அன்புடன்
அனுபிரேம்...



11 comments:

  1. நலம் வாழ்க..

    பிள்ளைகளுக்கு தாமே தம் கையால் செய்து அளிப்பது தான் முக்கியம்.. அருமை.. நல்ல முயற்சி..

    குழந்தைகளுக்கான கதையைப் பகிர்ந்ததும் நன்று..

    ReplyDelete
  2. குழந்தைகளுக்கு பயனளிக்கும் விடயம் நன்று

    ReplyDelete
  3. அநு சகோ அருமையான ஓர் எழுத்தாளரைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க! நான் ஆங்கில லிட்ரேச்சர் இவரைப் பற்றியும் இவரது எழுத்துகளையும் ரசித்தவன். ஆங்கிலேய வம்சம் என்றாலும் ரொம்ப எளிமையான ஆங்கிலம்...அருமை!!

    கீதா: அனு ஹையோ ரஸ்கின் பான்ட்!! ரொம்பப் பிடிக்கும் அவரது முதல் நாவல் ரொம்பச் சின்ன வயசுல எழுதினது ரூம் ஆன் த ரூஃப் வாசிச்சுப் பாருங்க நூலகத்துல இருந்தா கிடைச்சா...அருமையா இருக்கும்...அப்புறம் குழந்தைகளுக்கான முதல் கதை த ஆங்க்ரி ரிவர்....இங்க நீங்க சொல்லிருக்கறது இரண்டாவது கதை. என் மகனுக்கு அவன் 5 ஆம் வகுப்பு படிக்கும் சமயத்தில் ஆங்கில புத்தகங்கள் அறிமுகப்படுத்தினேன் அப்போது இவரது புத்தகங்கள், அப்புறம் எனிட் ப்ளைட்டன்,(ஃபேமஸ் ஃபைவ் ரொம்ப நல்லாருக்கும்) ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன் (ட்ரெஷன் ஐலன்ட் ரொம்ப நல்லாருக்கும்...) சார்ல்ஸ் பெரால்ட் (சிண்ட்ற்றெல்லா கதைகள்) கலிவர்ஸ் ட்ராவெல்ஸ்.....என்று அனு நம்மூர் எழுத்தாளர்கள் சௌம்யா ராஜேந்திரன் மற்றும் ரிச்சாஜா இவங்க வெப்சைட் Snuggle With Picture Books
    நடாஷா ஷர்மா, அருந்ததி வெங்கடேஷ் இப்படி இருக்காங்க. உங்க குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்க. புத்தகங்கள் குழந்தைகளுக்கு நிறைய கற்பிக்கும்!!! உங்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை...நீங்களெ அப்படித்தான்...என்மகனுக்குச் செய்ததை உங்களுக்குச் சொன்னேன்...ஹாஹாஹா

    க்ரியேட்டிவ் வொர்க் ரொம்பநல்லாருக்கு அனு உங்கள் வரைதல் அழகு..இன்னும் மேம்படுத்திக்கோங்க...ரொம்ப நல்லா பண்றீங்க எல்லாமே..உங்க குழந்தைகளுக்கும் எல்லாம் சொல்லறீங்க கதை எல்லாம் பகிர்ந்துக்கறீங்க சூப்பர் அனு!!!.எனக்கு நான் என் மகனுக்குச் செய்தது எல்லாம் நினைவுக்கு வருது!!!!! இப்பவும் அவனுக்கு நேரம் இருக்கும் போது நான் வாசித்தது பார்த்தது, அவன் வாசித்தது பார்த்தது....அப்புறம் கேட்ட பாட்டு என்று பகிர்ந்து கொள்வதுண்டு...

    வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி கீதாக்கா...

      தமிழில் வாசிக்கும் அளவு நான் ஆங்கிலத்தில் வாசிப்பது இல்லை... வாசிக்க முயற்சிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்...ஆங்கில நாவல்கள் எடுத்தாலே ...அத்துனை ஆர்வம் வருவது இல்லை...சரியான நாவல் தேர்வு இல்லை என்பதே உண்மை...



      பசங்க பள்ளியில் நண்பர்கள் மற்றும் பள்ளி நூலகம் வாயிலாக இந்த ஆங்கில புத்தகங்களின் அனுபவங்களை பெறுகிறார்கள்...அவர்களின் வழி நானும் கற்கிறேன்...

      நீங்க சொன்ன எல்லா நூல்களையும் குறித்துக் கொண்டேன்,,,விரைவில் அனைத்தையும் வாசிப்போம்....

      இப்போது வாசிப்பில் the angry river...


      Delete
  4. ஆங்கிலத்தில் படிச்சிருக்கேன் .தமிழில் ரொம்ப அழகா இருக்கு வாசிக்க .

    படங்களும் நல்லா இருக்குப்பா ..

    ReplyDelete
  5. அழகாக வரைந்து இருக்கிறீங்க அனு. மகனும் அருமையாக புக் தயாரித்து இருக்கிறார். நாங்களே செய்யும்போது சந்தோஷமாக இருக்கும். என் மகனுக்கும் சின்ன வகுப்பில் செய்திருக்கேன்.அவர் அழகா வரைவார்.
    கதை மிக அருமை..

    ReplyDelete
  6. அழகான புரிஜக்ட்.. நீங்க நல்லாத்தான் வரைஞ்சிருக்கிறீங்க அனு.

    பினியா கதை சூப்பர். குழந்தைகளின் கதை பெரும்பாலும் படிக்கும்போது தெரிந்ததுபோல இருக்கும், ஆனா இது ச்சோ இன்றஸ்ரிங்....

    ReplyDelete
  7. நல்ல இருக்கு அனு டிராயிங், ஸ்கிராப் வொர்க், கதையும் தான்

    ReplyDelete
  8. படங்கள் அருமை
    கதையும் அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  9. நீங்கள் வரைந்த ஓவியம் அழகு.
    கதை அருமை.
    அன்பு செய்யும் மாயம் .
    குழந்தைகளுக்கு ஏற்ற கதை.
    பகிர்வுக்கு நன்றி அனு.

    ReplyDelete